அடுத்த தெருவில் இருக்கும் கடைக்கு செல்ல வேண்டுமென்றால் இரு சக்கர வாகனம்..., நூறடி தொலைவில் இருக்கும் ஆலயத்திற்கு செல்ல வேண்டுமென்றால் நான்கு சக்கர வாகனம்...இப்படி தான் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தராமல் நாம் இன்றைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த கணினி உலகிலும், சென்னையை சார்ந்த 86 வயதான பெண்மணி ஒருவர், உலகளவில் நடைபெற இருக்கும் தடகள போட்டியில் கலந்து கொள்ள இருப்பது, நம்மை உடல் ஆரோக்கியத்தை பற்றி சிந்திக்க வைக்கிறது...
'சென்னை மாவட்ட மூத்தோர் தடகள கழகம்' சார்பில் செண்பக மூர்த்தி (தலைவர்), ருக்மணி தேவி (பொருளாளர் - சிறந்த 'தடியூன்றி தாண்டுதல்' வீராங்கனை) மற்றும் சசிகலா (செயலாளர்) ஆகியோரால் 14 ஆம் முறை நடத்தப்பட்ட தடகள போட்டியானது, நேற்று சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. 100 மீட்டர், 200 மீட்டர் என ஆரம்பித்து 10000 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டம் எறிதல், 5 கிலோமீட்டர் நடக்கும் போட்டி என நடைபெற்ற வெவ்வேறு போட்டிகளில் 35 வயதை கடந்த ஆண்களும், பெண்களும் மிகுந்த ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். இந்த மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் அனைவரும் தேசிய மற்றும் உலகளவில் நடைபெற இருக்கும் தடகள போட்டியில் கலந்த கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment