Thursday 1 September 2016

அருண் விஜய் நடித்திருக்கும் 'குற்றம் 23' படத்தின் இசை மற்றும் டிரைலரானது இன்று வெளியிடப்பட்டது



ஒருபுறம் நடிப்பிற்காக எப்படிப்பட்ட முயற்சியையும் எடுக்க துணியும் ஒரு நடிகர், மறுபுறம் மனதில் தோன்றும் சிந்தனையை அப்படியே திரைப்படத்தில் யதார்த்தமாக காட்சியாக்க தெரிந்த ஒரு இயக்குனர். இந்த மாதிரியான இரண்டு வலுவான திறமை படைத்த  கலைஞர்களை கொண்டு ஒரு திரைப்படம் உருவானால், நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு  அளவே இருக்காது...அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் தான் இயக்குனர் அறிவழகனின் இயக்கத்தில், அருண் விஜய் நடித்திருக்கும் 'குற்றம் 23'. இந்த குற்றம் 23 படத்தின் பாடல் மற்றும் டிரைலரானது சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் நடிகர் ஜெயம் ரவி தலைமை தாங்கிய இந்த விழாவில் இயக்குனர்கள் எஸ்.பி.ஜனநாதன், மகிழ்திருமேனி, சரவணன் (எங்கேயும் எப்போதும்), இயக்குனர் - நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன், நடிகர் பரத், உதய், ஸ்ரீகாந்த், மஹேந்திரன், ரியாஸ் கான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், 'குற்றம் 23' படத்தின் கதாநாயகன் அருண் விஜய், இயக்குனர் அறிவழகன், நடிகர் விஜயகுமார், குற்றம் 23 படத்தின் தயாரிப்பாளரும், ரெதான் - தி சினிமா பீப்பல் நிறுவனத்தின் உரிமையாளருமான இந்தெர் குமார், கதாநாயகி மஹிமா நம்பியார், அபிநயா, வம்சி கிருஷ்ணா, அரவிந் ஆகாஷ், அமித் பார்கவ், சுஜா வருணி, மிஷா கோஷல், சஞ்சய் அர்சாணி, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் கே.எம். பாஸ்கரன், படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன், பாடலாசிரியர் விவேகா, ஆடை வடிவமைப்பாளர் ஹீரா அறிவழகன் என ஒட்டுமொத்த குற்றம் 23 படக்குழுவினரும் இந்த விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

"மனதில் வரைந்து வைத்திருக்கும் சித்திரத்தை அழகாக திரையில் பிரதிபலிக்கும் திறமை படைத்த இயக்குனர் அறிவழகன். அவருடைய காட்சிகளுக்கு நான் எப்போதுமே ரசிகன்..கலைக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணிக்கும் அருண் விஜய் மற்றும் அறிவழகனின் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த குற்றம் 23 திரைப்படம் மாபெரும் வெற்றியை தழுவ நான் வாழ்த்துகிறேன்..." என்று கூறினார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்.

"இந்த குற்றம் 23 படத்தின் இசை வெளியீட்டிற்கு வருவதற்காக நான் பல பொய்களை என்னுடைய இயக்குனரிடம் கூறலாம் என யோசித்து வைத்திருந்தேன்...ஆனால் அந்த கடவுளே எனக்கு இந்த விழாவில் பங்கேற்க வழிவகுத்து தந்து விட்டார்...ஒரு கதாநாயகனாக வெற்றி மகுடத்தை  இந்த 'குற்றம் 23' படத்தின் மூலம் அருண் விஜய் சூடுவார்  என்ற நம்பிக்கை எனக்கு பெருமளவில் இருக்கின்றது...." என்று கூறினார் நடிகர் ஜெயம் ரவி 

"நான் பார்த்து வியப்படைந்த நடிகர்களில் என்னுடைய விக்டரும் (அருண் விஜய்) ஒருவர்... எந்த சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட தருணத்திலும் நடிக்க கூடிய ஒரு நடிகர் அருண் விஜய்...ஓடும் ரயிலில் ஏற வேண்டும் சொன்னால் ஏறுவார், கடலுக்குள் குதிக்க வேண்டும் என்று சொன்னாலும் கூட குதித்து விடுவார். இப்படி நடிப்பிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொள்ளும் ஒரு கலைஞன் அருண் விஜய். அதே போல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி காட்சிகளை உருவாக்குவதில் திறமை படைத்தவர் இயக்குனர் அறிவழகன். இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்து, எனக்கு பிடித்தமான போலீஸ் கதையை மையமாக கொண்டு  'குற்றம் 23' படத்தை உருவாக்கி இருக்கின்றனர்... குற்றம் 23 படம் உருவாக காரணமாக இருந்த ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்...."என்று உற்சாகமாக கூறினார் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்.

No comments:

Post a Comment