Sunday 24 July 2016

மாயமான விமானத்தை கண்டுபிடிக்க 3வது நாளாக தொடரும் தேடும் பணி


சென்னை தாம்பரத்தில் இருந்து 29 பேருடன் அந்தமான் புறப்பட்ட AN-32 ரக விமானம் 150 கடல் மைல் தொலைவில் பறந்தபோது, விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. மாயமான விமானத்தை தேடும் பணி 3வது நாளாக இன்றும் தொடர்கிறது. சென்னை - அந்தமான் இடையேயுள்ள கடற்பகுதிகளின் 4 திசைகளில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை விமானத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் ஹெலிகாப்டர் உட்பட 13 விமானங்களும், 19 கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் காணாமல் போன விமானம் எங்கு விழுந்தது என்பதை கண்டறிய செயற்கைக்கோள் உதவியுடன் தேடும் பணியை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. எனினும் மாயமான விமானம் தொடர்பான தகவல்கள் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இதனிடையே விமானம் புறப்பட்ட 10வது நிமிடத்தில், அனைத்தும் சரியாக உள்ளது என்று விமானி தெளிவாக கூறியதாகவும், அதன் பிறகு ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், இக்கட்டான நேரத்தில் விமானத்தை சென்னைக்கு திருப்ப விமானி முயற்சித்ததும் தெரியவந்துள்ளது. விமானம் பறந்த வழித்தடத்தை ஆய்வு செய்யும் போது இதனை அதிகாரிகள் கண்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாயமான விமானத்தில், தூத்துக்குடி மாவட்டம் செம்பூர் கிராமத்தைச் சேர்ந்த கடற்படை வீரர் முத்துகிருஷ்ணன் இருந்தது தெரியவந்துள்ளது. சென்னை கே.கே.நகரில் உள்ள விமானப்படை அதிகாரிகள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், சக வீரர்களுடன் அந்தமானுக்கு சென்றதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். முத்துகிருஷ்ணனை பற்றிய தகவல்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சின்னா ராவ், ஸ்ரீனிவாஸ் ஆகியோர் காணாமல் போன விமானத்தில் இருந்தது தெரிய வந்துள்ளது.விமானம் காணாமல் போன செய்தி கேட்டு அவர்களது குடும்பத்தினர் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். விமானத்தை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

No comments:

Post a Comment