Tuesday 19 July 2016

குழந்தைகளை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் திரைப்படமாக 'கட்டப்பாவ காணோம்' இருக்கும் என்கிறார் ' கதாநாயகன் சிபிராஜ்




நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துவரும் சிபிராஜிற்கு அடுத்த ஒரு மைல் கல்லாக அமைய இருக்கும் திரைப்படம் கட்டப்பாவ காணோம். இயக்குனர் அறிவழகனின் இணை இயக்குனரான மணி செய்யோன் இந்த படத்தை இயக்க, விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்  சார்பில் கட்டப்பாவ காணோம் படத்தை தயாரித்து வருகின்றனர் தயாரிப்பாளர்கள் மதுசூதனன் கார்த்திக், சிவக்குமார், வெங்கடேஷ் மற்றும் லலித். சிபிராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் கட்டப்பாவ காணோம் திரைப்படத்தில் சாந்தினி, காளி வெங்கட், மைம் கோபி, யோகி பாபு, லிவிங்ஸ்டன், சித்ரா லட்சுமணன், 'விஜய் டிவி' சேது, திருமுருகன், ஜெயக்குமார், டாடி சரவணன் மற்றும் பேபி மோனிகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

"ஒரு வாஸ்து மீனை மையமாக கொண்டு தான் எங்களின் கட்டப்பாவ காணோம் படமானது நகரும். வெறும் கம்ப்யூட்டர் கிராபிக்சை வைத்து நாங்கள் ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை. அதனால் தான் ஒரு உண்மையான வாஸ்து மீனை, கட்டப்பாவாக இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளோம். கதை ஓகே ஆன அடுத்த நிமிடமே நான் இந்த வாஸ்து மீனை வாங்கி அதனோடு சுமார் நான்கு மாதமாக பழகி வந்தேன். நாய்களை போலவே மீன்களுக்கும் தங்களின் உரிமையாளர்களை அடையாளம் கண்டு கொள்ளும் சக்தி இருக்கிறது என்பதை அதன் பிறகு தான் நான் உணர்ந்தேன். ஒரு பொருளின் மதிப்பானது அதன் விலையில் கிடையாது. என்னதான் வைர கல் விலை உயர்ந்ததாக இருந்தாலும், அது நமக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கவில்லை என்றால், நாம் அதை அணிய மாட்டோம். அதே சமயம் விலை மலிவான யானைமுடி நமக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமானால், அதை நாம் முழு மனதோடு அணிந்து கொள்வோம். அந்த வகையில் நிச்சயம் எல்லா தரப்பு ரசிகர்களின் உள்ளத்திலும் எங்களது அதிர்ஷ்ட மீனான கட்டப்பா நீந்தி செல்லும்" என்கிறார் கட்டப்பாவ காணோம் படத்தின் இயக்குனர் மணி செய்யோன்.

தொடர்ந்து வித்தியாசமான கதை களங்களை  தேர்ந்தெடுத்து நடித்து வரும் சிபிராஜ், அந்த படங்களில் ஒரு சிறப்பம்சத்தை உள்ளடக்கி உள்ளார். குழந்தைகளை கவர்ந்து இழுக்குமாறு இருக்கும் கதை தான் அந்த சிறப்பம்சம். "கட்டப்பாவ காணோம் திரைப்படத்தின் கதையை என்னிடம் இயக்குனர் மணி சொன்ன அடுத்த நொடியே நான் இந்த படத்தில் நடித்தாக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். இயக்குனர் அறிவழகனை போலவே, மணியும் தனித்துவமான கதைகளை இயக்குவதில் திறமை படைத்தவர். விரைவில் வெளியாகும் எங்களின் கட்டப்பாவ காணோம் படத்தின் மூலமாக ரசிகர்களும் இதை உணருவர். முதல் முறையாக தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைக்கும் 'விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்' நிறுவனமானது, எங்களின் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் பக்கபலமாக செயல்பட்டு வருகின்றனர். இதுவரை ரசிகர்கள் கண்டிராத 'மாடர்ன் இளைஞன்' கதாப்பாத்திரத்தில் நான் நடித்திருக்கும் கட்டப்பாவ காணோம் படமானது குழந்தைகளை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் படமாக இருக்கும்".. என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சிபிராஜ். 

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் கட்டப்பாவ காணோம் திரைப்படத்தில், இசையமைப்பாளராக சந்தோஷ் தயாநிதி (இனிமே இப்படித்தான்), ஒளிப்பதிவாளராக ஆனந்த் ஜீவா (நவீன சரஸ்வதி சபதம், விண்மீன்கள்), படத்தொகுப்பாளராக சதிஷ் சூர்யா (இறுதி சுற்று, நான்), கலை இயக்குனராக எம். லக்ஷ்மி தேவ், பாடலாசிரியர்களாக முத்தமிழ், உமாதேவி, நடன இயக்குனராக அசார் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டராக பில்லா ஜெகன் (ஜிகர்தண்டா) ஆகியோர் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு.

No comments:

Post a Comment